வெலிங்டனில் இன்று அதிகாலை தொடங்கிய இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா திணறி வருகின்றது.
உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. அதனடிப்படையில் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரில் 360 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்து வரும் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து வருகிறது இந்திய அணி. சரியான இணைப்பாட்டமொன்றை ஏற்படுத்த முடியாதளவிற்கு நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்து விக்கெட்டுக்களை வீழ்த்தி வருகின்றனர்.
இந்திய அணி 55 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றுள்ள நிலையில் மழையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணி சார்பில் பிரித்வி ஷா-16, மயங்க் அகர்வால்-34, புஜார-11, விராட் கோலி-2, விஹாரி-7 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து வெளியேறியுள்ள நிலையில் ரஹானே 38 ஓட்டங்களுடனும் ரிசாப் பன்ட்-10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் ஜேமிசன் 3 விக்கெட்டுக்களையும், சௌதி மற்றும் போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதுவரை 15 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாக வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: